உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் “பி” பிரிவில் உள்ள அயர்லாந்து- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே கால்இறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டன. இதனால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அயர்லாந்து 5 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி இங்கிலாந்தை மட்டும் தோற்கடித்தது. இந்தியா, வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் தோற்று இருந்தது. தற்போது 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் அயர்லாந்து உள்ளது.
நெதர்லாந்து அணி 5 ஆட்டத்தில் விளையாடி ஐந்திலும் தோற்றது. இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகளிடம் தோற்றது. ஆறுதல் வெற்றிக்காக அந்த அணி ஏங்குகிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் “ஏ” பிரிவில் உள்ள நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். நியூசிலாந்து அணி 5 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. பாகிஸ்தான், ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளை வென்றது. அவுஸ்திரேலியாவிடம் தோற்றது.
இலங்கை அணி ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளை வென்றது. பாகிஸ்தானிடம் தோற்றது. அவுஸ்திரேலியாவுடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அந்த அணி 7 புள்ளியுடன் உள்ளது. நியூசிலாந்து அணி கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறது.
இலங்கை அணியை தோற்கடிக்க அந்த அணி முழு திறமையுடன் விளையாடும். தற்காலிக கேப்டன் ரோஸ் டெய்லர் நல்ல நிலையில் உள்ளார். கேப்டன் வெட்டோரி, மிலிங் ஆகியோர் உடல் தகுதியுடன் இல்லாததால் ஆடமாட்டார்கள்.
இலங்கை அணியில் தில்சான், தரங்கா, ஜெயவர்த்தனே, சங்ககரா ஆகியோர் பேட்டிங்கிலும், மலிங்கா, முரளீதரன் ஆகியோர் பவுலிங்கிலும் நல்ல நிலையில் உள்ளனர். வெற்றி பெறும் அணி “பி” பிரிவில் முன்னேற்றப் பாதையில் செல்லும். உலக கோப்பையில் இரு அணிகளும் 7 ஆட்டத்தில் விளையாடி உள்ளன. இதில் நியூசிலாந்து 4 ஆட்டத்திலும் இலங்கை 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
Filed under: வினையாட்டு